Monday, November 10, 2008

நற்செய்திகள்!

சிகர்களிடம் சொன்னது போல பொது வாழ்க்கைக்கு வருவது குறித்த முழுமையான பயிற்சி முடித்து, பிராக்டிகலுக்குத் தயாராகி விட்டார் போலிருக்கிறது சூப்பர்ஸ்டார்!

கிட்டத்தட்ட அவருக்கு நெருக்கமான நண்பர்கள் அனைவருமே, அவரது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசத் துவங்கியிருக்கிறார்கள்.

முதலில் சோ ஆரம்பித்து வைக்க, அடுத்து சிரஞ்சீவி, மோகன் பாபு என பலரும் ரஜினியின் எண்ணங்கள் குறித்தும், தங்களுடன் அவர் பேசியவை குறித்தும் வெளிப்படையாகப் பேசத் துவங்கியுள்ளனர்.

நேற்று சென்னைக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக வந்த சத்ருக்கன் சின்ஹா, ரஜினியைச் சந்தித்து நீண்ட நேரம் பேசினார்.

பின்னர் ரஜினி தன்னிடம் பேசியது குறித்து பத்திரிகையாளர்களிடமும் பகிர்ந்து கொண்டார் (ரஜினியை சத்ருக்கன் சந்திக்கப் போகிறார் என பத்திரிகைகளுக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்!).

ரஜினி இந்த மக்களுக்கும் தன் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சர்யங்களை வைத்துள்ளார் என்றும், இந்த தமிழ் மக்களுக்கு ரஜினி ஒரு மிகப் பெரிய சொத்து என்றும் சின்ஹா குறிப்பிட்டார்.

பின்னர், ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ரஜினியின் பின்னால் உள்ள மக்கள் சக்தி, அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் மக்கள் கட்டுப்படுகிற விதம் வட இந்தியத் தலைவர்களை பிரமிக்க வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

எந்திரன் படம்தான் இன்றைக்கு இந்தியத் திரையுலகின் பேச்சாக இருப்பதையும், பாலிவுட்டில்கூட அந்தப் படத்தின் செய்திகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார் சின்ஹா. ‘ரஜினியின் நிஜ இலக்கு வேறு. ஆனால் இப்போதைக்கு அவரது குறிக்கோள் எந்திரன் படத்தை சிறப்பாகத் தருவதுதான் எனப் புரிந்து கொண்டேன்.”

ரஜினிக்கு இந்த முன்னாள் பிஜேபி அமைச்சர் சின்ஹா சொன்ன ஒரு சின்ன அட்வைஸ்:

தனிக்கட்சி ஆரம்பித்து சிரஞ்சீவி இப்போது சில சிரமங்களுக்குள்ளாகி உள்ளார். இதைத் தவிர்க்க நேரடியாக அரசியலுக்கு வருவதை விட, இப்போதைக்கு சமூக சேவை அமைப்பு மூலம் மக்களை நேரடியாகச் சந்தியுங்கள். இன்னும் பவர்புல்லாக இருக்கும் என்பது. இதை ரஜினியிடமும் கூறியதாகத் தெரிவித்துள்ளார். அவரும் வழக்கம்போல் கேட்டுக் கொண்டாராம்.

ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்: ‘சத்ருகன் சின்ஹாவின் இந்தி வசன உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். குணச்சித்திரம் கலந்த வில்லத்தனம் என்ற புது ஸ்டைலையே அறிமுகப்படுத்தியவர் சத்ருக்கன். என் கேரியரின் ஆரம்ப நாட்களில் என்னை தமிழகத்தின் சத்ருக்கன் என்று கூட பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.

அமிதாப்பைப் போலவே, சத்ருக்கன் சின்ஹாவும் எனக்கு முன்னோடிதான்!’.

– சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1987, ஸ்டார்டஸ்ட் பேட்டியில்...

ஒரு குறிப்பு: நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் இதுபோன்ற ரஜினி நண்பர்களின் கருத்துக்கள் தொடர்ந்து வெளி வரவுள்ளன. ரஜினியும் இவர்களைத் தடுப்பதில்லை என்பதை மனதில் கொள்ளவும்.

தவிர, இவையெல்லாமே ஒரு நல்லவரின் வருகையை அறிவிக்கும் நற்செய்திகள் மாதிரி... நற்செய்திகள் எப்போதும் நன்மைக்கே எனக் கொள்க!
http://www.envazhi.com

No comments: